Sunday, 31 May 2015

கி.வீரமணியின் மூடநம்பிக்கைகள்

ஈ.வே. ராமசாமி நாயக்கர், மற்றும் மணியம்மையாரின் மூடநம்பிக்கைகளையும், பொய் பித்தலாட்டங்களையும் பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய சீடர் வீரமணியின் முரண்பாடுகளையும் மூடநம்பிக்கைகளையும் பார்க்கலாம்.

மூடநம்பிக்கை: 1

இந்து புராணங்களில் முனிவர்கள் பலர் சாபம் இடுவர். இந்தச் சாபம் பலிக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இந்தச்‘சாபத்தை’கேலி செய்தவர்கள்தான் பகுத்தறிவாளர்கள். ஆனால் வீரமணி சொல்வதைச் சற்றுக் கூர்ந்து கவனியுங்கள்.

வீரமணி கூறுகிறார்:-
… தமிழர்கள் எவ்வளவு காலம் தான் ரத்தக் கண்ணீர் சிந்தி, உலகத்திடம் நியாயம் கேட்டு பேசி வருவதோ புரியவில்லை! தமிழினத்திற்கு இப்படி ஒரு ‘சாபக்கேடா’?
(விடுதலை 23-4-1996)

சாபம் என்பதெல்லாம் பொய். அது மூடநம்பிக்கை என்றெல்லாம் சொன்ன இந்தப் பகுத்தறிவாளர்கள், தமிழினத்திற்கு இப்படி ஒரு ‘சாபக்கேடா?’ என்று கேட்கிறார். அதாவது தமிழர்கள் ரத்தக் கண்ணீர் சிந்த யாரோ சாபம் கொடுத்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்.

சாபத்தை நம்புகிறவர்கள் மூடநம்பிக்கைகாரர்கள் என்று சொல்லும்போது அதே சாபத்தை வீரமணியும் நம்பும்போது அவரும் மூடநம்பிக்கைக்காரர்தானே!
மூடநம்பிக்கை 2

வீரமணி கூறுகிறார்:-
…மது விலக்கினால் இப்படி ஏழை, எளிய குடிப் பழக்கமுடைய கிராம மக்கள் விஷச் சராயத்தாலும், கள்ளச் சாராயத்தாலும், குடல் வெந்து சாகின்ற நிலை தவிர்த்து நல்ல சாராயம், கள்ளைக் குடித்தாவது இருக்க, அக்கடைகளையே திறக்கலாமே!
(விடுதலை 30-8-1998)

அதாவது கள்ளச் சாராயம் குடிப்பதைத் தடுக்க, நல்ல சாராயம் குடிக்க கடைகளைத் திறக்கலாமே என்கிறார்.

உண்மையில் சொல்லப் போனால் இது ஒரு தலைவருக்கு அழகல்ல. கள்ளச் சாராயத்தை அரசு கடுமையான சட்டங்கள் போட்டு தடுக்க வேண்டுமே ஒழிய அதற்குப் பதிலாக நல்ல சாராயத்தைத் தரும் கடைகளைத் திறக்கக்கூடாது.

வீரமணி சொல்கிற கருத்துப்படி-  அதுதான் சரியான கருத்தும் என்று பார்த்தாலும் கூட- நமக்கு ஒரு கேள்வி எழுகிறது.

…கஞ்சா குடித்து சாவதைவிட சிறிது நல்ல கஞ்சாவை அரசே கடைகள் மூலம் கொடுக்கலாம் என்று வீரமணி சொல்வாரா?

…அபின் சாப்பிட்டு சாவதைவிட நல்ல அபினை அரசே கடைகள் மூலம் விற்கலாம் என்று வீரமணி சொல்வாரா?

கண்டிப்பாகச் சொல்லமாட்டார். ஏனென்றால் இது எவ்வளவுப் பெரிய முட்டாள்தனம் என்று அவருக்கே தெரியும்.

நல்ல அபின் அல்லது நல்ல கஞ்சாவை சாப்பிட்டாலும் உடலுக்குக் கெடுதிதான். அதே போல நல்ல சாராயம் குடித்தாலும் உடலுக்குக் கெடுதிதான். அதை எப்படித் தடுக்கவேண்டும் என்றுதான் பார்க்கவேண்டுமே ஒழிய அதற்கு பதில் நல்ல சாராயம் என்பதெல்லாம் முட்டாள்தனமான கருத்தாகும்.

மூடநம்பிக்கை: 3

வீரமணி கூறுகிறார்:-
…கிராமங்களில் தோற்றுவிக்கப்பட்ட பகைவுணர்ச்சிப் ‘பேயை’ விரட்டியாக வேண்டும்.
(விடுதலை 20-7-1997)

இதில் வரும்‘பேய்‘ என்பது என்ன? ஆத்திகர்கள்தான் ‘பேயை’ நம்புவார்கள். நாத்திகர்கள் – பகுத்தறிவாளர்கள் நம்பமாட்டார்கள். ஆனால் நாத்திகரான – பகுத்தறிவாளரான – வீரமணி என்ன சொல்கிறார்?

பகைவுணர்ச்சிப் ‘பேயை’ விரட்டியாக வேண்டுமாம். ‘பேய்’ என்ற ஒன்று இருப்பதை நம்பித்தானே பேயோடு பகையை ஒப்பிடுகிறார்!

அப்படியானால் ‘பேய்’ என்பது இருக்கிறதா? ‘பேயி’ன் இலக்கணம் என்ன? என்று கேட்ட வீரமணிகளுக்கு – அதே கேள்வியை இப்பொழுது ஆத்திகர்கள் கேட்கிறார்கள்.

வீரமணியின் பதில் என்ன?

மூடநம்பிக்கை : 4

வீரமணி கூறுகிறார்:-
உலகின் புராதன மிகப்பெரிய தொழிலான விவசாயம் மேல்சாதியினர் செய்யக்கூடாது என்றே மனு கட்டளையிட்டுள்ளார். விவசாயத் தொழிலாளர்களின் பிரச்சினை, ஐம்பது ஆண்டு சுதந்திரத்திற்குப் பின்னரும் தீராததற்கு இதுவே அடிப்படை! பார்ப்பனர் பங்கேற்ற தொழில் துறையாக அது இருந்திருப்பின் இன்றுள்ள கஷ்டங்கள் இருந்திருக்கவே இருக்காது. இது ஒரு கசப்பான உண்மை.
(விடுதலை 30-04-1998)

வீரமணி என்ன கூறுகிறார் தெரியுமா?

பார்ப்பனார் பங்கேற்ற தொழில் துறையாக அது இருந்திருப்பின் இன்றுள்ள கஷ்டங்கள் இருந்திருக்கவே இருக்காது. இது ஒரு கசப்பான உண்மையாம். சரி.

அப்படியென்றால் இதில் ஓன்று தெளிவாகிறது.

அதாவது புராதன மிகப்பெரிய தொழிலான விவசாயத்தில் பார்ப்பனர் பங்கேற்கவில்லை. இதில் பங்கேற்றவர்கள் பார்ப்பனர் அல்லாதவர்கள் என்றாகிறது. இதன் மூலும் பார்ப்பனர் அல்லாதவர்கள் பங்கேற்றதனால்தான் விவசாயத் தொழிலாளர்களின் பிரச்சினை, ஐம்பது ஆண்டு சுதந்திரத்திற்குப் பின்னரும் தீரவில்லை என்றாகிறதல்லவா? பார்ப்பனர் அல்லாதவர்கள் பங்கேற்றதனால்தான் இன்றுள்ள கஷ்டங்கள் இருக்கின்றனவா?

எப்படி சுயமரியாதைகாரன்?

தாய்-தந்தையை இழந்தவர்கள்- சுயமரியாதைகாரர்களாக ஆன பிறகு அவரவர் தாய்க்கோ, தந்தைக்கோ ஆண்டுதோறும் நினைவு நாள் கொண்டாடுகிறார்களா? இல்லையே? இன்றைய சமாதிகள்தான் நாளைய கோவில்கள் என்கிற மூடநம்பிக்கை வளர்ச்சி வரலாற்றில் பாலபாடத்தை மறந்துவிட்டு, பெரியார் சமாதிக்கு மரியாதை, பெரியார் சிலைக்கு மலர் மாலை போடுகின்ற ஒருவன் எப்படி சுயமரியாதைக்காரன்?
– வே. ஆனைமுத்து, நூல்; பெரியார் கொள்கைக்குக் குழிதோண்டிய திராவிடர் கழகம்

மூடநம்பிக்கை : 5

வீரமணி கூறுகிறார்:-
ஈரோடு, காஞ்சி என்று சொன்னால் – நமக்கு ஒரு வரலாற்றுக்கு உரியவர்கள் பிறந்த இடம் என்ற வரலாற்றுச் சிறப்பே தவிர, அதில் வேறு ஒன்றும் கிடையது.
(நூல்: சங்கராச்சாரியார்?)

மேலும்வீரமணி கூறுகிறார்:-
(நினைவிடங்களுக்கு) அங்கே போகக்கூடியதோ, மற்றதோ அது ஒரு பிரசார நிகழ்ச்சி, ஒரு வரலாற்றுக் குறிப்பு – மற்றபடி அந்த நினைவுச் சின்னங்களுக்கு மகத்துவம் உண்டு, சக்தி உண்டு என்று நாம் சொல்லவும் இல்லை, நம்பவும் இல்லை.
(நூல்: சங்கராச்சாரியார்?)

நினைவுச் சின்னங்களுக்கு மகத்துவம் உண்டு, சக்தி உண்டு என்று நாம் சொல்லவும் இல்லை, நம்பவும் இல்லை என்று கூறுகிறார். அப்படியானால் அந்த நினைவுச் சின்ன இடங்களில் செருப்பு போட்டுக்கொண்டு போகக்கூடாது என்று சொல்வது ஏன்?

பெரியார் திடலில் உள்ள பெரியார் சமாதியின் மேல் கால்வைக்க – உட்கார அனுமதிப்பீர்களா?

பெரியார் சமாதியின் மேல் கால்வைக்க – உட்கார அனுமதிப்பீர்களானால் அப்போது மட்டுமே நினைவுச் சின்னங்களுக்கு மகத்துவம் உண்டு. சக்தி உண்டு என்று நாம் சொல்லவும் இல்லை, நம்பவும் இல்லை என்று வீரமணி சொல்வது உண்மையாகும். அப்படி அனுமதி இல்லை என்று மறுக்கப்படுமானால் பகுத்தறிவாளர்களான உங்களுக்கும் நினைவு சின்னங்களுக்கு மகத்துவம் உண்டு, சக்தி உண்டு என்ற நம்பிக்கை உண்டு என்றுதான் அர்த்தம்.

ஈரோடு, காஞ்சி என்று சொன்னால் – நமக்கு ஒரு வரலாற்றுக்கு உரியவர்கள் பிறந்த இடம் என்ற வரலாற்று சிறப்பே தவிர, அதில் வேறு ஒன்றும் கிடையாது என்று சொன்ன வீரமணி கூறுகிறார்:-

ஈரோடு – நமது அறிவு ஆசானை அகிலத்திற்கு அளித்த இன்பபுரி; லட்சியப் பயணத்திற்கு விதைவிதைத்த சுயமரியாதை இயக்கமாம், ஈடுஇணையற்ற மனித நேய இயக்கம் பிறந்து வளரக் காரணமான மண்.
(விடுதலை 19-05-1998)

இந்த ஈரோடு வர்ணனையைப் பார்க்கும்போது, மேலே சொன்ன ஈரோடு, காஞ்சி என்று சொன்னால் – நமக்கு ஒரு வரலாற்றுக்கு உரியவர்கள் பிறந்த இடம் என்ற வரலாற்று சிறப்பே தவிர, அதில் வேறு ஒன்றும் கிடையாது என்பதற்கும் இந்த வர்ணனைக்கும் உள்ள முரண்பாடு உள்ளங்கை நெல்லிக்கனிப்போல் தெளிவாகத் தெரிகிறதல்லவா!

ஈரோடு – நமது அறிவு ஆசானை அகிலத்திற்கு அளித்த இன்பபுரி என்று சொல்லும்போதும் லட்சியப் பயணத்திற்கு விதைவிதைத்த சுயமரியாதை இயக்ககமாகும் ஈடு இணையற்ற மனித நேய இயக்கம் பிறந்து வளரக் காரணமான மண் என்று சொல்லும்போதும் நமக்கு ஒன்று புரிகிறது.

அதாவது ஆத்திகர்கள் எவ்வாறு கடவுள்கள் பிறந்த இடங்களான அயோத்தி, மதுரா, காசி, மதுரை, பழனி போன்ற இடங்களை பக்திப் பரவசத்துடன் எவ்வாறு இன்பபுரி என்றும் அருள்புரியக் காரணமான மண் என்றும் சொல்லுகின்றார்களோ அதே போல வீரமணியும் பக்திப் பரவசத்துடன் ஈரோடை இன்பபுரி என்றும் காரணமான மண் என்றும் சொல்லுகிறார்.

ஆத்திகர்கள் கடவுள்கள் பிறந்த இடங்களைப் புகழும்போது அது மூடத்தனம் என்றால் ஈ.வே.ராமசாமி நாயக்கர் பிறந்த இடமான ஈரோடை வீரமணி புகழும்போது அதுவும் மூடத்தனம்தானே!

அது மூடத்தனம் இல்லையென்றால் ஈரோடு – நமது அறிவு ஆசானை அகிலத்திற்கு அளித்த இன்பபுரி என்று சொல்லுகின்றாரே அந்த ஈரோடு – மற்றொரு அறிவு ஆசானை ஏன் அகிலத்திற்கு அளிக்கவில்லை?

ஈரோடு – லட்சியப் பயணத்திற்கு விதைவிதைத்த சுயமரியாதை இயக்கமாம் ஈடு இணையற்ற மனித நேய இயக்கம் பிறந்து வளரக் காரணமான மண் என்று சொல்லுகின்றாரே – அந்த ஈரோடுதான் காரணமா? அப்படியென்றால் அதே மண் மற்றொரு ஈடு இணையற்ற மனித நேய இயக்கம் பிறந்து வளரக் காரணமாக இல்லையே ஏன்? இதனால் லட்சியப் பயணத்திற்கு விதைவிதைத்த சுயமரியாதை இயக்கமாம் ஈடு இணையற்ற மனித நேய இயக்கம் பிறந்து வளர அந்த மண்தான் காரணம் என்று சொன்னால் அது மூடநம்பிக்கைத்தானே!

மேலும் இங்கு மற்றொரு விஷயத்தையும் கூற விரும்புகிறேன்.

அமைச்சர் அன்பில் தருமலிங்கம், “அய்யா திருச்சியைத்தான் தனது தலைமையிடமாக கொண்டு பெரும்பாலும் வாழ்ந்தார். ஆகவே திருச்சியில்தான் அடக்கம் செய்து அண்ணா சதுக்கம் போல எளிய நினைவுச்சின்னம் எழுப்பிடவேண்டும் என்று பிடிவாதமாகக் கூறிக்கொண்டிருந்தார். ஆனால் அதைப் போல் பிடிவாதமாக மணியம்மை ”அய்யா வாழும் போதே தன்னை பெரியார் திடலில்தான் அடக்கம் செய்யவேண்டும்” என்று தன்னிடம் இடத்தைக்கூட குறிப்பிட்டுள்ளதாகவும் கூறினார். அதற்கு வீரமணியும் ஆமாம் ஆமாம் என்றார்.
(நூல்:- வரலாற்று நாயகன், திருவாரூர் கே. தங்கராசு)

ஈ.வே.ராமசாமி நாயக்கர் தன்னை பெரியார் திடலில்தான் அடக்கம் செய்யவேண்டும் என்றும் இடத்தைக்கூட குறிப்பிட்டுள்தாகவும் சொன்னால் அது மூடநம்பிக்கைத் தானே!”

எப்படி மூடநம்பிக்கை என்று கேட்கிறீர்களா?

இறந்த பிறகு எங்கு புதைத்தால்தான் என்ன?

பெரியார் திடலில்தான் அடக்கம் செய்யவேண்டும் என்று சொன்னால் பெரியார் திடலில் அப்படி என்ன மகிமை இருக்கிறது?

அந்த பெரியார் திடலில்தான் அடக்கம் செய்ய வேண்டும் என்று சொன்னால் ஏதோ மகிமை இருக்கிறது என்றுதானே அர்த்தம்?

நமது ஹிந்து புராணங்களில் இறைவன் ஒரு இடத்தைச் சொல்லி தன்னை அங்குதான் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று சொல்லுவார். இது மூடநம்பிக்கை என்று பகுத்தறிவாளர்கள் சொல்லுகின்றார்கள்.

அப்படியானால் இறைவன் ஒரு இடத்தைச் சொல்லி தன்னை அங்குதான் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று சொல்லுவதற்கும் பெரியார் திடலில்தான் அடக்கம் செய்யவேண்டும் என்று சொல்லுவதற்கும் என்ன வித்தியாசம்?

இப்பொழுது சொல்லுங்கள்! பெரியார் திடலில்தான் அடக்கம் செய்யவேண்டும் என்று சொன்னால் அது மூடநம்பிக்கைத்தானே!

மூடநம்பிக்கை : 6

வீரமணி கூறுகிறார்:-
…இதற்கு முன் உ.பி.யே இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் என்கிற நிலைமாறி, தென்கோடியிலுள்ள…
(விடுதலை 20-03.1998)

ஹிந்துக்கள்தான் தலையெழுத்தை நம்புவார்கள். அதாவது ஒவ்வொருவருக்கும் தலையெழுத்தை பிரமன் எழுதுகிறான். அந்த தலையெழுத்துப்படிதான் வாழ்க்கை நடக்கிறது. அதை மீறி எதுவும் நடப்பதில்லை. அதாவது தலையெழுத்துதான் வாழ்க்கையை நிர்ணயிக்கின்றது என்று ஹிந்துக்கள்தான் நம்புகிறார்கள்.

இது மூடநம்பிக்கை என்று பகுத்தறிவாளர்கள் சொல்கிறார்கள்.

ஆனால் வீரமணி என்ன கூறுகிறார்?

‘உ.பி.யே இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் என்கிற நிலைமாறி, தென்கோடியிலுள்ள….’ என்று கூறுகிறார். அதாவது தலையெழுத்துதான் நிர்ணயிக்கும் என்பதை ஒப்புக்கொள்கிறார்.

ஹிந்துக்கள் சொல்கிற தலையெழுத்துக்கும் வீரமணி சொல்கிற தலையெழுத்துக்கும் என்ன வித்தியாசம்?

ஒரு வித்தியாசமும் இல்லை.

அப்படியென்றால் ஹிந்துக்கள் சொல்கிற தலையெழுத்தை மூடநம்பிக்கை என்று பகுத்தறிவாளர்கள் சொல்வார்களானால் வீரமணி சொல்கிற தலையெழுத்தையும் நாம் மூடநம்பிக்கை என்று சொல்லலாம் அல்லவா?

இதன்படி வீரமணி மூடநம்பிக்கைக்காரர்தானே!

முரண்பாடு 1

பா.ஜ.க. ஐந்து அணுகுண்டுகளை வெடித்தது. உலகத்திலே பாரத நாட்டின் பெருமை உயர்ந்தது. ஒவ்வொரு பாரதக் குடிமகனும் பெருமை கொண்டான். ஆனால் இதைக் கூட பொறுத்துக் கொள்ளாமல் வீரமணி என்ன கூறினார் தெரியுமா?

50ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 5 அணுகுண்டுகள்; இந்த தரித்திர நாராயணர்கள் வாழும் பூமிக்கு இப்போது அவசியம்தானா?
(விடுதலை 10-06-1998)

இதைப் பார்த்ததும் நமக்கெல்லாம் ஒன்று தோன்றும். அடடா! வீரமணிக்குத்தான் நமது நாட்டு தரித்திர நாராயணர்கள் மீது எவ்வளவு பச்சாதாபம்! எவ்வளவு பரிதாபம்! எவ்வளவு இரக்கம்!

ஆனால் நமக்குத் தோன்றும் இந்த எண்ணம் கூட தவறானது. வீரமணியின் பச்சாதாபம், பரிதாபம், இரக்கம் எல்லாம் உண்மையானது அல்ல. இதை ஆதாரம் இல்லாமல் சொல்லவில்லை.

இதோவீரமணி கூறுகிறார்:-
நாகையில் அறிவு ஆசான் தந்தை பெரியார் தம் சிலை – சுமார் 2 லட்சம் ரூபாய்களுக்கு மேல் செலவழிக்கப்பட்டு சிலை, பீடம், பூங்காவெல்லாம் உருவாகி, நாகை நகரத்திற்குள்ளே நுழைவோர் அனைவரையும் வரவேற்கும் துவக்க சிலையாக கம்பீரத்துடன் அமைக்கப்பபட்டுள்ளது.
(விடுதலை:- 13-09-1998)

இப்பொழுது சொல்லுங்கள், வீரமணியின் பச்சாதாபம், பரிதாபம், இரக்கம் எல்லாம் உண்மையானது தானா?

இப்பொழுது அதே கேள்வியை நாமும் கேட்கிறோம்.

நாகையில் பெரியார் தம் சிலை – சுமார் 2 லட்சம் ரூபாய்களுக்கு மேல் செலவழிக்கப்பட்டு சிலை, பீடம், பூங்காவெல்லாம் உருவாகி, நாகை நகரத்திற்குள்ளே நுழைவோர் அனைவரையும் வரவேற்கும் துவக்க சிலையாக கம்பீரத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இப்போது அவசியம்தானா? அந்த இரண்டு லட்சத்தையும் நமது நாட்டு தரித்திர நாராயணர்களுக்குக் கொடுத்து உதவியிருக்கலாமே! அதுதானே உண்மையான பச்சாதாபம், பரிதாபம், இரக்கம் ஆகும்? அதைவிட்டுவிட்டு பறவைகள் மலம் கழிக்க சிலையும், பீடமும், மனிதர்கள் பொழுதுபோக்க பூங்காவும் அமைக்க இரண்டு லட்சம் செலவழிப்பது இரக்கத்தைக் காட்டவில்லை. மாறாக ஆடம்பரம் மற்றும் விளம்பர மோகத்தைத்தான் காட்டுகிறது.

முரண்பாடு 2

வீரமணி கூறுகிறர்:-
ஒரு அறக்கட்டளையின் பணம் என்பது பொதுப்பணம். கோடியாக இருப்பது என்பது பற்றி யாருக்குமே மறுப்பு இல்லை. அந்தக் கோடியை வைத்துக்கொண்டு நாங்கள் யாரும் வட்டிக்கு விட்டு சம்பாதிப்பதில்லை. அதன் மூலம் பொதுப்பணிகள் செய்கிறோம்.
(சன் தொலைக்காட்சியில் கி.வீரமணி பேட்டி)

ஆனால் வீரமணி தலைமையிலிருந்து விலகியவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

வட்டிக்கடை திறப்பதிலும், சீட்டு நிறுவனங்களை நடத்துவதிலும், காட்டும் ஆர்வம், பெரியார் நூல்களைக் காப்பாற்றுவதில் இல்லாமல் போய்விட்டது கொடுமையிலும் கொடுமை.
(நூல்:- வீரமணி தலைமையிலிருந்து விலகியது ஏன்?)

வீரமணி தலைமையிலிருந்து விலகியவர்கள் தங்கள் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக திராவிடன் நல நிதியைக் குறிப்பிடுகிறார்கள். திராவிடன் நல நிதி வட்டிக்கு விடுவதல்லாமல் வேறு என்ன என்று கேட்கிறார்கள். நியாயம்தானே! பதில் சொல்வாரா வீரமணி?

முரண்பாடு: 3

சாதி ஒழிப்புதான் எங்களுக்கு முக்கியம் என்று சொல்கின்ற தி.க.வினர்தான் யார் யார் என்ன என்ன சாதி என்று நமக்கு நினைவூட்டுபவர்கள். ஆனால் அதில் கூட அவர்கள் பொய் சொல்லித்தான் பிழைப்பு நடத்த வேண்டியுள்ளது. அதற்கு ஒரு நல்ல உதாரணம் வீரமணியையே கூறலாம்.

வீரமணி கூறுகிறார்:-
…சிவசேனையின் தலைவரான பால்தாக்கரே என்ற பார்ப்பனர்.
(விடுதலை 16-07-1997)

அதாவது பால்தாக்கரே ஒரு பார்ப்பனர் என்று சொல்கிறார். பால்தாக்கரே ஒரு பார்ப்பனர் என்று 1997-ம் ஆண்டு சொன்ன அதேவீரமணி கூறுகிறார்:-
…பால்தாக்கரே ஒரு சூத்திரர்தான். சாஸ்திரப்படி, சாதியில் அவர் ஒரு காயஸ்தா (நம் பகுதியில் உள்ள சில பிரபு முதலியார்கள், சைவப் பிள்ளைமார்கள் போன்ற பிரிவு அது!)
(உண்மை – ஜனவரி (16-31)-2001)

1997-ம் ஆண்டு பார்ப்பனராக இருந்த பால்தாக்கரே 2001-க்குள் எப்படி சூத்திரரானார்?

பால்தாக்கரே பார்ப்பனராக இருந்தால் சூத்திரர் என்று சொன்னது பொய்யாக இருக்கவேண்டும். அல்லது பால்தாக்கரே சூத்திரராக இருந்தால் பார்ப்பனர் என்று சொன்னது பொய்யாக இருக்க வேண்டும். கடைசியாகக் கேட்கிறோம், பால்தாக்கரே பார்ப்பனரா? சூத்திரரா?

முரண்பாடு : 4

‘துக்ளக்’ ஆசிரியர் சோ அவர்கள் ஒரு கட்டுரையில் ‘விவரமறிந்தவர்கள்’ என்று கூறிவிட்டாராம்! அதை விமர்சித்துவீரமணி கூறுகிறார்:-

…இன்னொருயிடத்தில் விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள் என்கிறார். அது என்ன புதிர்? யார் அந்த விவரமறிந்தவர்கள்? ஊர், பெயர் தெரியாதவர்களா அவர்கள்? இப்படி யாரும் கூறிவிடமுடியுமே! இதற்குப் பெயர்தான் ஆதாரமா?
(விடுதலை 21-09-1996)

ஆனால் இப்படி அவர்களை விமர்சித்து எழுதிய வீரமணி அவருடைய மற்றொரு கட்டுரையில் எழுதுகிறார்:-

…சாதி ரீதியாக, மத ரீதியாகக் கலவரங்கள் நடக்க வேண்டும் என்பதற்காக வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது. குறிப்பாக திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் கலவரங்களைத் தூண்டி விடுவதற்காகப் பணம் வருகின்றது. – இந்த இரண்டாவது செய்தி பற்றித் தென்மாவட்டங்களில் விவரம் அறிந்தவர்களிடையே பரவலான பேச்சு இருக்கிறது.
(விடுதலை 20-02-1997)

சோ அவர்களை வீரமணி கேட்ட அதே கேள்வியை இப்போது நாமும் கேட்கலாம் அல்லவா! அதனால்தான் கேட்கிறோம்.

அது என்ன புதிர்? யார் அந்த விவரமறிந்தவர்கள்? ஊர், பெயர், தெரியாதவர்களா அவர்கள்? இப்படி யாரும் கூறிவிடமுடியுமே! இதற்குப் பெயர்தான் ஆதாரமா? இதற்கு வீரமணிதான் பதில் சொல்ல வேண்டும்.

வீரமணியைப் பற்றி சங்கமித்ரா!

சாதி ஒழிப்புப் பணியில் சென்ற 20ஆண்டுகளில் வீரமணி செய்தது என்ன? மாறாக ஒரு கொள்கை அமைப்பாக – போராளி நிறுவனமாக இருந்த இதை(தி.க) வீரமணி ஒரு வட்டிக் கடையாக – கல்வி வணிக அமைப்பாக மாற்றிவிட்டார். இந்தத் துரோகத்தைத் தமிழ் மக்களாகிய நாம் ஏன் அனுமதிக்க வேண்டும்? துரோகங்களை எல்லாம் எதிர்த்துக் குரல் கொடுத்த பெரியாருக்கே துரோகம் செய்ததில், இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய துரோகி வீரமணி ஆகிறார்.

பெரியார் தந்த வேலைத் திட்டத்தில் வீரமணியின் – சாதனை – பங்களிப்பு என்ன?

வீரமணி பட்டியலிடுகிறார். கிட்டத்தட்ட 44 அறப்பணி அமைப்புகள் தோழர் வீரமணி – பெரியார் தந்த பணத்தில் நடத்துகின்ற அமைப்புகளாகும். இதில், எந்த அமைப்பு பெரியாரின் உயிர்க்கொள்கையான சாதி ஒழிப்புக்குப் பாடுபடுகிறது? பெரியாருடைய எத்தனை பள்ளிகளில் -கல்லூரிகளில் – பெரியாரின் பார்ப்பன, வருணாசிரம எதிர்ப்புக் கொள்கைள் – பாடமாக – பயிற்சியாக போதிக்கப்படுகின்றது? இதில் பெரியார் பால்பண்ணை, பெரியார் கணினிக் கல்லூரி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளி, பெரியார் ஆங்கிலக் கல்விப் பயிலகம், மகளிர் பாலிடெக்னிக், மகளிர் தொழில் பயிலகம், முதலிய பணம் பண்ணுவதற்கென்றே தோழர் வீரமணியால் நடத்தப்படுகின்றன என்று நாம் சொன்னால் அதில் தவறு என்ன? மேலும் பெரியார் அமைப்புகளில் பீராய்ந்த பணத்தில் முழுக்க முழுக்க வட்டிக் கடைகளாக – திராவிடன் நல நிதியும் – குடும்ப விளக்கு நிதியும் நடத்தப்படுகின்றன என்றால், அதை யார்தான் மறுக்க முடியும்?

(சங்கமித்ரா உண்மை இதழில் பணியாற்றியவர். ஏப்ரல் 84 முதல் சூலை 85 வரை 15 மாதங்கள் உண்மை இதழ் இவர் தயாரிப்பில் வந்ததாகக் கூறுகிறார் சங்கமித்ரா.)

ம.வெங்கடேசன்

தொடரும்.

பெரியாரின் பகுத்தறிவும் மணியம்மையின் மூடநம்பிக்கையும்

ஈ.வே.ராமசாமி நாயக்கருடைய புளுகுகளையும் வரலாற்றுப் பிழைகளையும், முரண்பாடுகளையும் நாம் பார்த்தோம். இனி அவருடைய வாரிசு மணியம்மையாரின் புளுகுகளையும் மணியம்மையினுடைய மூடநம்பிக்கையையும் ஆராயலாம்.

மணியம்மை கூறுகிறார்:-
”1954 ஆம் ஆண்டு ரங்கூனிலே நடைபெற்ற புத்தர் மாநாட்டிலே கலந்துகொள்ள அய்யா சென்றிருந்தார். நானும் இன்று அமைச்சராக உள்ள ராசாராமும் உடன் சென்றிருந்தோம். உலகப் புத்த சங்கத் தலைவர் மல்ல சேகரா அந்த மாநாட்டுக்கு வந்திருந்தார். அப்போது டாக்டர் அம்பேத்கர், முஸ்லீம் மதத்தில் தாம் சேர முடிவெடுத்துள்ளதாகக் கூறி தந்தை பெரியாரையும் முஸ்லீம் மதத்தில் சேருமாறு கேட்டுக்கொண்டார். அப்போது அய்யா இந்து மதத்திலே இருந்துகொண்டு அதைச் சீர்த்திருத்த வேண்டுமே தவிர அந்த இழிவுகளை அப்படியே விட்டுவிட்டு மதம் மாறக்கூடாது. அப்படி நீங்கள் மதம் மாறினால் ஏராளமானவர்களையும் அழைத்துச் செல்லுங்கள் என்று கூறினார்.”
(விடுதலை 6-1-1976)

அம்பேத்கர் முஸ்லீம் மதத்தில் சேரப்போவதாகச் சொன்னார் என்று சொல்கிறாரே மணியம்மை- இது உண்மையா?

ஒரு பொழுதும் உண்மையாக இருக்கமுடியாது. ஏனென்றால் அம்பேத்கர் மதமாற்ற அறைகூவல் விட்டவுடனேயே ஹைதராபாத் நிஜாம், முஸ்லீமாக மாறினால் ஒரு கோடி ரூபாயும், ஒரு கல்லூரியும் தருவதாக வாக்களித்தபோது அம்பேத்கர் அதைப் புறக்கணித்தார். அம்பேத்கர் முஸ்லீம் மதத்தை கனவில் கூட நினைத்துப்பார்த்ததில்லை.

அம்பேத்கர் கூறுகிறார்:-
”நான் இஸ்லாம் தழுவியிருந்தால் கோடான கோடிப் பணம் எங்கள் காலடியில் கொட்டப்பட்டிருக்கும். ஐந்தாண்டுகளில் நாடே சீரழிந்து போயிருக்கும், ஆனால் மாபெரும் அழிவு வேலையைச் செய்தவன் என்று வரலாற்றில் இடம் பெற நான் விரும்பவில்லை”.
(நூல் :- Ambedkar – A Critical study)

முஸ்லீமாக மாறினால் நாடே சீரழிந்து இருக்கும் என்று சொன்ன அம்பேத்கரா முஸ்லீம் மதத்தில் மாறப்போவதாக சொன்னார்? அம்பேத்கர் அப்படி சொல்லியிருக்கமாட்டார் என்பதற்கு மற்றொரு ஆதாரம்–

அ. மார்க்ஸ் என்பவர், ”பெரியார்?” என்ற நூலில் கூறுகிறார்:”அம்பேத்கர் பவுத்த மதத்தைத் தழுவிய போது நீங்கள் இஸ்லாமுக்கு மாறுவதே சரியான அரசியலாக இருக்கும் என (பெரியார்) அவருக்கு அறிவுரைத்ததும் இங்கே நினைவு கூறத்தக்கது.”

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறியதை அம்பேத்கர் கூறியது என்று சொல்வதுதான் பகுத்தறிவா? அ.மார்க்ஸ் சொல்வது பொய்யாக இருக்கும் என்று சந்தேகப்பட வேண்டாம். ஏனென்றால் ஆரம்பித்திலிருந்தே ஈ.வே. ராமசாமி நாயக்கர்,‘தாழ்த்தப்பட்டவர்கள் இஸ்லாமுக்கு மாறுவதே சரியானதாகும்,’என்று பல தடவை கூறியிருக்கிறார்.

இதையும் நம்பாதவர்களுக்கு ஈ.வே. ராமசாமி நாயக்கரே பதில் சொல்கிறார்–

”நான் அம்பேத்கர் அவர்களைச் சந்தித்போது அவர் என்னிடத்தில் ஒரு ஃபாரத்தை நீட்டி, “போடு கையெழுத்தை; நாம் இருவரும் புத்த நெறியில் சேருவோம்” என்றார். நான் சம்மதிக்கவில்லை.”
(விடுதலை 16-2-1959)

ஈ. வே. ராமசாமி நாயக்கரின் இந்தக் கூற்றிலிருந்து, அம்பேத்கர் புத்தமதத்துக்கு மாறவேண்டும் என்று சொன்னாரே தவிர இஸ்லாமுக்கு அல்ல என்பது தெளிவாகும். மணியம்மையின் இந்தப் புளுகை எதில் சேர்ப்பது? இதுதான் ஒரு தலைவிக்கு அழகா?

இதைக்கூட விட்டுவிடுவோம். இவர்கள் எதை மூடநம்பிக்கை என்று சொல்லிவந்தார்களோ, அதையே இவர்கள் நம்பினதுதான் வேடிக்கை.

மணியம்மை கூறுகிறார்:-
”என்ன செய்வது, எதை எழுதுவது, எப்படி நினைப்பது என்பதே புரியவில்லை. மனதை எவ்வளவுதான் திடப்படுத்தினாலும் என்னையும் மீறிச் சில சமயங்களில் தளர்ந்து விடுகிறேன். உடனே அய்யாவின், அந்தப் புன்னதை முகம் என் கண்முன்தோன்றி, ”பைத்தியக்காரி இவ்வளவு தானா நீ! இத்தனை ஆண்டுகள் என்னோடு பழகியும் நான் எடுத்துச் சொல்லி வந்த கருத்துகளை உன்னிடத்திலே காணமுடியவில்லையே!

நீ எப்படி மற்றவர்களுக்கு வழிகாட்டியாய் என் கொள்கையைக் கடைபிடிப்பவளாய் இருக்கப்போகிறாயோ! சாதாரணப் பெண்கள் போலேயே பக்குவமடையாத மனநிலையிலேயே இருக்கிறாயே! என்றாவது ஒரு நாள் எனக்கு இந்த நிலை ஏற்படும். இயற்கையை வெல்ல முடியாது. அப்போது எப்படி நீ இருக்க வேண்டும் என்று எத்தனை முறை உனக்கு உன்மனம் நோகாத வண்ணம் வேடிக்கைப் பேச்சாகவே சொல்லிச் சொல்லிப் பக்குவப் படுத்திவைத்தேன். என் எண்ணத்தைப் புரிந்துகொள்ளாமல், மற்றவர்களுக்கும், உனக்கும் ஒரு வித்தியாசமும் இல்லாமல் நடந்துகொண்டு என் மனத்திற்கு வேதனை தருகிறாயே! என்று சொல்வதுபோல் தோற்றம் அளிக்கும்”.

உடனே நான் ”இல்லை-இல்லை-மன்னித்துவிடுங்கள். உங்கள் வார்த்தையை மீறி இன்று அல்ல, என்றுமே நடக்கமாட்டேன்” என்று மனதால் நினைத்துக்கொண்டு நானே ஒரு சிரிப்பும் சிரித்துக்கொண்டு என் உள்ளத்தை இரும்பைப்போல் கடினமாக ஆக்கிவிடுவேன் அப்போதுதான் என் மனதில் அமைதியும் ஒரு நிறைவும் பெறும்”.
(விடுதலை 4-1-1974)

பகுத்தறிவுவாதியான மணியம்மை கூறுகின்ற இந்த மாதிரி நிகழ்ச்சிகள் இந்துமதப் புராணங்களில் ஏராளமாகக் கிடக்கின்றன. அசரிரீ என்ற பெயரில் ஒரு குரல் கேட்கும். அந்த அசரிரீக் குரல், எச்சரிக்கைக் குரலாகவும், அறிவுரைக் குரலாகவும் அல்லது பாராட்டுக் குரலாகவும் இருக்கும். இப்படி அசரிரீ கேட்கும் என்பது ஆத்திகர்களின் நம்பிக்கையும் கூட.

ஆனால் இதில் பகுத்தறிவுவாதிகளின் கொள்கை அல்லது கருத்து என்ன?

அசரிரீக் குரல் தானாகவே கேட்காது. அதுவும் மனிதன் யாருமே இல்லாமல், எந்தவிதக் கருவியும் இல்லாமல் மனிதனைப் போல் பேசுவது என்பது பகுத்தறிவுக்கு முரணானது. இந்த நம்பிக்கை மூட நம்பிக்கையாகும் என்றெல்லாம் பிரச்சாரம் செய்து வந்தார்கள். இப்படி பிரச்சாரம் செய்து வந்த பகுத்தறிவுவாதிகளின் தலைவி மணியம்மை என்ன கூறுகிறார்?

தான் சோர்ந்து இருக்கும் சில சமயங்களில் ஈ.வே. ராமசாமி நாயக்கர் தனக்கு ஆறுதல் கூறுவதுபோல் தோற்றம் அளிக்கும் என்கிறார் மணியம்மை. இறந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர் எப்படி தோற்றம் அளிப்பார்? அப்படியே தோற்றம் அளித்தாலும் பேசுகின்ற மாதிரி குரலுடன் தோற்றமளிக்க முடியுமா? ஒருவர் இறந்தாலும் கூட அவரை நினைக்கும்போது அவருடைய தோற்றம் நம் மனதில் எழும் என்று சொல்லலாம். அது வெறும் எண்ணமே தவிர உண்மை அல்ல என்றும் சொல்லலாம். அப்படியென்றால் உண்மையில்லாத இந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர், தோற்றத்திற்கு அல்லது எண்ணத்திற்கு எதற்காக மன்னித்துவிடுங்கள் என்று சொல்ல வேண்டும்? மன்னித்துவிடுங்கள் என்று சொன்னால் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் தோற்றம் மன்னித்துவிடுமா? ஈ.வே. ராமசாமி நாயக்கரின் தோற்றம் ஆறுதல் சொல்லியவுடன்தான் மணியம்மைக்கு மனதில் அமைதியும், நிறைவும் பெறும் என்பதுதான் பகுத்தறிவா? எவ்வளவோ ஈ.வே. ராமசாமி நாயக்கரின் தோழர்கள் மன அமைதியும் நிறைவும் இல்லாமல் திராவிடர்க் கழகத்திலிருந்து பிரிந்து வந்தார்கள். அப்போதாவது ஈ.வே. ராமசாமி நாயக்கரின் தோற்றம் அவர்களுக்குமுன் தோன்றி மன அமைதியைக் கொடுத்திருக்கலாமே- ஏன் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் தோற்றம் அவர்களுக்குமுன் தோன்றவில்லை? ஈ.வே. ராமசாமி நாயக்கரின் தோற்றம் மன அமைதியை கொடுத்துவிட முடியுமா?

இந்தத் தோற்றமே நம்மால்தான் ஏற்படுகிறது என்று சொல்வார்களானால் அதற்காக மன்னிப்பு எதற்கு? தோற்றமே நம்மால் தான் ஏற்படுகிறது என்கின்றபோது அதற்காக ஈ.வே. ராமசாமி நாயக்கரால்தான் மன அமைதி பெறுகிறது என்று சொல்வது எதற்காக? இதுதான் பகுத்தறிவு மூடநம்பிக்கை என்று சொல்வது! அதாவது பகுத்தறிவுவாதிகளின் மூடநம்பிக்கை.

அடுத்து-

மணியம்மை கூறுகிறார் :-
”அய்யா அவர்களிடம் சென்று நீங்கள் பயந்துவிட்டீர்களாமே! நீங்கள் ஒன்றுக்கும் பயப்பட வேண்டாம். நான் பிழைத்தது ஏதோ காரணத்திற்காகத்தான். உங்களை விட்டுவிட்டு அவ்வளவு சீக்கிரம் போய்விடமாட்டேன்.. என்று கூறி அவரை மகிழ்வித்தேன்”
(விடுதலை 4-1-1974)

நான் பிழைத்தது ஏதோ காரணத்திற்காகத்தான் என்று மணியம்மை கூறுகிறாரே? இதுவாவது பகுத்தறிவுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கதா?

இராமர் ஒரு காரணத்திற்காக (இராவணனை கொல்ல) இப்பூமியில் பிறந்தார். கிருஷ்ணர் ஒரு காரணத்திற்காக (கம்சனைக் கொல்ல) பிறந்தார் என்று இந்துக்கள் சொல்லும் போது அதைப் பகுத்தறிவுவாதிகள் கேலி பேசினார்கள்… விமர்சித்தார்கள்… மூடநம்பிக்கை என்றெல்லாம் சொன்னார்கள்.

இப்படிச் சொன்ன பகுத்தறிவுவாதிகளின் தலைவி மணியம்மை, நான் பிழைத்தது ஏதோ காரணத்திற்காகத்தான் என்று சொன்னால் அதுவும் இவர்களின் மூடநம்பிக்கைத்தானேநதான் பிழைத்தது ஏதோ காரணத்திற்காகத்தான் என்றால் இறப்பதும் கூட ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் என்ற முடிவுக்கு நாம் வரவேண்டியிருக்கும். (இது ஆத்திகர்களைப் பொருத்தவரை நம்பிக்கை. ஆனால் பகுத்தறிவுவாதிகளைப் பொருத்தவரை மூடநம்பிக்கை) அப்படியென்றால் ஈ.வே. ராமசாமி நாயக்கரும், மணியம்மையும் இறந்தது எந்தக் காரணத்திற்காக? மணியம்மை, நான் பிழைத்தது ஏதோ காரணத்திற்காக என்று சொன்னால் அந்தக் காரணம் என்ன என்று விளக்க வேண்டாமா?

நான் பிழைத்தது ஏதோ காரணத்திற்காக என்று சொல்லும்போது, ஏதோ ஒரு செயல் புரிவதற்காக, சாகக் கிடந்த நான் மறுபடியும் பிழைத்திருக்கிறேன் என்று பொருள்படுகிறது. ஆனால் இதே கருத்தைத்தானே இந்துக்களும் கர்மா என்ற பெயரில் சொல்கின்றனர்! மக்கள் (தங்கள் வினைப்படி) ஏதோ ஒரு காரணத்திற்காகப் பிறக்கின்றனர். தங்கள் கர்மங்களை ஆற்றுகின்றனர். பின்பு இறக்கிறார்கள்.

ஆனால் இந்தக் கர்மக் கொள்கையை எதிர்க்கின்ற மணியம்மைதான் ஏதோ ஒரு காரணத்திற்காக தான் பிழைத்ததாகச் சொல்லி மறைமுகமாக கர்மா கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளார். ஏன் இந்த முரண்பாடு? இதுதான் இவர்களுடைய பகுத்தறிவு மூடநம்பிக்கை.

மேலும் மணியம்மை கூறுகிறார்:-
(பெரியார்) அமைதியுடன் நாம் இனி எப்படி நடந்து கொள்கிறோம். கட்டுக்குலையாமல் என்றும் போல் கட்டுப்பாடு, ஒழுக்கம் – உண்மையுடன் இருக்கிறோமா இல்லையா என்று பார்த்துக் கொண்டே இருப்பதற்காக அவரது இல்லத்திலேயே ஓய்வுடன் இருக்கிறார். வேறு ஒன்றும் இல்லை. நம்மை அவர் கவனித்துக் கொண்டுதான் நமது செயலைப்பார்த்துகொண்டு தான் இருப்பார்.
(விடுதலை 4-1-1974)

மணியம்மையினுடைய இந்தப் பேச்சு அவர்களுடைய பகுத்தறிவுப்படி மூடநம்பிக்கையா, இல்லையா?

1973-ல் இறந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர் எப்படி 1974-ல் ஓய்வுடன் இருப்பார்? எப்படி கவனித்துக்கொள்வார்?

இறந்தவர்களின் ஆத்மா இவ்வுலகில் இருக்கும். ஒருவருடைய அப்பா அல்லது அம்மா அல்லது வேறு உறவினர்கள் போன்றவர்கள் இறந்தால் அவர்கள் நம்மோடு இருப்பார்கள். நம்மை கவனித்துக் கொள்வார்கள் – என்பது இந்துக்களுடைய நம்பிக்கை.

ஆனால் இதை மூடநம்பிக்கை என்று சொல்லுகின்ற மணியம்மையார் இறந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஓய்வுடன் இருக்கிறார். அவர் கவனிப்பார் என்று சொல்லுகிறாரே? அப்படியானால் இதுவும் மூடநம்பிக்கைத்தானே!

இப்படி இவருடைய பகுத்தறிவு மூடநம்பிக்கைக்கு ஏராளமான சான்றுகளைத் தந்துகொண்டே போகலாம். ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு சமாதி வைத்தது, ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு நினைவுநாள் கொண்டாடுவது போன்ற இவர்களுடைய பகுத்தறிவுக்கு முரணான வகையில் மணியம்மையார் நடந்து கொண்டதை ஈ.வே. ராமசாமி நாயக்கரின் சீடர்களே கண்டித்திருக்கிறார்கள் என்றால் மணியம்மையாருடைய பகுத்தறிவு மூடநம்பிக்கை எந்த அளவுக்கு இருந்திருக்கும் என்பதை நாம் அறியலாம். இந்த அளவுக்கு மூடநம்பிக்கை கொண்டிருந்த மணியம்மையாரும் அவருடைய சீடர்களும் ஆத்திகர்களை மூடநம்பிக்கையாளர்கள் என்று சொல்ல தகுதி இருக்கிறதா?

ம.வெங்கடேசன்

-தொடரும்…